"ஜக்குபாய்" - வெளியாகும் முன் திரை உலகினரை ஒன்று திரட்டிய படம்; ரஜினி நடித்திருக்க வேண்டிய படம்; ப்ரெஞ்ச் படமான 'வசாபி'யை தழுவி உருவாக்கப்பட்ட படம்; மறு ஒலிப்பதிவு இல்லாமல் இணையத்தில் உலாவும் படம் என்று பலவித செய்திகளை தொடர்ந்து படம் திரையரங்கிற்கு வந்துள்ளது.
21 வருடங்களுக்கு முன் பிரிந்து போன மனைவியையே நினைத்துக் கொண்டிருக்கும் நாயகனுக்கு அவள் இறந்து விட்டதாக செய்தி கிடைக்கிறது. மனைவியின் ஈம சடங்குகளை நிறைவேற்ற ஆஸ்ட்ரேலியா செல்லும் நாயகனுக்கு தனக்கொரு மகள் இருப்பது தெரிய வருகிறது. தான் பார்த்திராத தந்தையின் மேல் அளவற்ற கோபம் கொண்ட மகளிடம் தான் யாரென்ற உண்மையை மறைக்கும் நாயகனுக்கு, தனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் எழுகிறது. அதன் தொடர்ச்சியாக தன் மகளுக்கும் ஆபத்து உள்ளதென நாயகனுக்கு தெரிய வருகிறது. யாரால் எதனால் ஆபத்து என நாயகன் நூல் பிடித்து பயணித்து படத்தை முடிக்கிறார்.
சரத்குமார். காவல் துறை அதிகாரியாக மீண்டும். மனைவியை நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதும், மகளிடம் பாசம் காட்டாமல் தவிக்கும் பொழுதும் அவரது திரையுலக அனுபவம் தெரிகிறது. அவர் இதுவரை ஏற்றிராத சோகமயமான கதாபாத்திரத்தில் வந்தாலும், சண்டைக் காட்சிகளில் குறைவில்லாமல் நடித்திருக்கிறார். வயதிற்கேத்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒத்துக் கொண்டிருப்பது பாராட்டத்தக்கது எனினும் படத்தில் வரும் கடந்தகால காட்சிகளில் அழகாக தோன்றி மறைகிறார்.
ஸ்ரேயா. பேசிக் கொண்டேயிருக்கிறார். அதுவும் குழந்தைத் தனமான பேச்சுக்கள் மற்றும் செய்கைகள். அது உடையிலும் பிரதிபலிக்கிறது. தந்தையை பற்றி குறைக் கூறுவதில் தொடங்கி வில்லனிடம் தொணதொணப்பது வரை வாய் ஓயாமலும், சலிக்காமலும் பேசுவது மட்டுமல்லாமல் சில இடங்களில் அதற்கேத்தவாறு முகபாவங்களையும் அளித்துள்ளார். வாய்ப்பு கிடைத்தால் நடிகைகள் நடிக்கவும் முயலுவார்கள் என்ற நம்பிக்கையை மிக சிறு அளவு ஏற்படுத்துகிறார்.
கவுண்டமணி. திரையில் இவர் தோன்றியதும் அரங்கில் கரகொலி எழுகிறது. நகைச்சுவை பெரிய அளவு இல்லையெனினும் வசனங்களில் இவர் அளிக்கும் நையாண்டியின் தரம் ரசிக்க வைக்கிறது. நாயகியை தொடர்ந்து படத்தில் அதிகம் பேசுபவராக வருவது மட்டுமல்லாமல் ஆஸ்ட்ரேலியா காவல் துறை அதிகாரியாக வருகிறார். நாயகனுடன் இவர் சேர்ந்து சுடும் பொழுது இவருக்கு மட்டும் கை தட்டல் கிடைக்கிறது. இவரது இடம் அப்படியே உள்ளது என தெரிகிறது.
நாயகனின் மனைவியாக அறிமுகமாகி ஸ்ரீஷா நிறைவாய் செய்துள்ளார். நாயகனின் தந்தையாக விஜயகுமார். எப்பொழுதும் போல் காவல் துறை உயர் அதிகாரி. பெரும் பாதி கதை ஆஸ்ட்ரேலியாவில் நடப்பதால் கடைசி வரை உயிருடன் இருக்கிறார். நாயகனுக்கு நாயகி கட்டாயம் என்ற தமிழ்ப் பட கலாச்சாரத்தினை காப்பதற்காகாவும், குத்தாட்டம் போடவும் கிரண்.
தற்போது வரும் அனைத்து படங்களின் ஒளிப்பதிவு போல் இப்படத்தின் ஒளிப்பதிவும் அட்டகாசமாக உள்ளது. நாயகன் அணிந்திருக்கும் கண்ணாடிக்குள் தெரியும் பிம்பத்தில் இருந்து எதிரில் இருப்பவரின் முகம் பெரிது படுவது, பட முடிவு சண்டைக் காட்சிகள் என பல குறிப்பிடலாம். இசையமைப்பாளர் ரஃபி தன்னை பெரிதும் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. "அன்புள்ளமான்விழியே.." என்ற பழைய பாட்டின் கலப்பான புதிய இசை சோபிக்கவில்லை எனினும், காட்சிப் படுத்தி அதை படத்தில் கொடுத்திருக்கும் விதமே மனதில் நிற்கிறது.
கே.எஸ். ரவிக்குமார். வியாபார வெற்றிப் படங்களை அளிப்பதில் பெயர் போனவர். அதற்கான படம் தான் 'ஜக்குபாய்' எனினும் திரைக்கதையில் இருக்கும் மெல்லிய தொய்வு ஒரு குறையாக தெரிகிறது. படம் முன்னும் பின்னும் நடு நடுவில் பயணிக்கிறது. அதை புரியும்படி கையாண்டு இருந்தாலும், இன்னும் மெனக்கட்டிருந்தால் படத்தின் விறுவிறுப்பினைக் கூட்டியிருக்கலாம். 'ஆஸ்ட்ரேலியா' என்றதும் பலருக்கு நினைவு வருவது இன துவேஷத்தால் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவது தான். மாணவர்களை சம்பந்தப்படுத்தாமல் அந்த துவேஷத்தை மட்டும் ஒரு காட்சியில் மேம்போக்காக சொல்லியுள்ளார். அழுத்தம் கூட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். படத்தில் அதிகம் பேசாத நாயகனை ஒரு காட்சியில் மட்டும் நிறைய பேச வைத்துள்ளார். அடுத்த காட்சியில் ஸ்ரேயாவை அதே போல் பேச வைத்து தந்தைக்கும், மகளுக்கும் இருக்கும் குண ஒற்றுமையை சொல்ல முனைந்துள்ளார். அதற்கு பிறகு நாயகன் மீண்டும் அதிகம் பேசா விரதத்தை மேற்கொள்கிறார். வெற்றி படமாக ஆக்கப்பட்ட அவரது முந்தைய படத்திற்கு இருந்த பக்கபலம் போல் ஏதாவது இம்முறையும் இருந்தால் படத்தின் வெற்றி உறுதியே!!
"ராடான் பிக்சர்"சின் நெடுந்தொடர்கள் தொலைக்காட்சிகளில் பெறும் வெற்றியை இப்படம் திரையரங்குகளில் பெறுமா என்பது சந்தேகம் தான்.