"சுறா"- இளைய தளபதி விஜய்யின் ஐம்பதாவது படம்.
'யாழ் நகர்' என்றொரு கடலோர மீனவ கிராமம். தன்னை தலைவனாக எண்ணாத சுறா என்னும் உத்தமனை அங்கு வாழும் மக்கள் தலைவனாக கொண்டாடுகிறார்கள். சுறாவிற்கு குப்பத்தின் குடிசைகள் எல்லாம் வெயில், மழை தாங்கும் கல் வீடுகளாக மாற்றி விட்டு தான் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்றொரு கொள்கை. சுறாவிற்கு கல்யாணம் ஆனதா, இல்லையா என்ற கேள்விக்கு பதிலுடன் நிறைவுறுகிறது படம்.
விஜய் நாயகனாக. மன்னிக்கவும் பொழுதுபோக்குனர் என்று தான் அவரே தன்னை குறிப்பிடுகிறார். ஆடுகிறார், சண்டைப் போடுகிறார், ஆடுகிறார், சண்டைப் போடுகிறார், சவால் விடுகிறார், ஆடுகிறார், சண்டைப் போடுகிறார், சவாலில் வெல்கிறார். நடக்கும் பொழுது கைகளை பின்பக்கம் கட்டிக் கொள்கிறார் படம் முழுவதும். 'தஞ்சாவூர் ஜில்லாக்காரி' பாட்டில் தமன்னாவின் கால்சட்டை ஆடும் பொழுது அவிழாமல் இருக்கிறதா என தமன்னா ஆடும் முன் விஜய் அதை சோதிக்கும் காட்சிகள் குறிப்பிடும்படியாக உள்ளது. (படம் பார்த்தவர்களுக்கு புரியும். மற்றவர்களுக்கு பார்க்கும் பொழுது புரியும்.)
'அஸ்பெர்ஜர் சின்ட்ரோம்' வந்தது போல் சுறா வில்லன் முகத்தை பெரும்பாலும் பார்க்காமல் மேலே, கீழே, கழுத்தை, வானத்தை என பார்த்தவாறும், கையை சட்டையின் கழுத்துப்பட்டையில் வைத்தவாறும் பேசுகிறார். அது ஷாருக்கானின் 'மை நேம் இஸ் கான்' நடிப்பை சவாலுக்கு இழுப்பது போல் உள்ளது. குப்பத்திற்கு நல்லது செய்யும் சுறா அடியாட்களை துரத்திக் கொண்டு போய் சண்டைப் போடும் பொழுது. ஒரு அடியாளை தூக்கி தண்ணீர் பீப்பாயிலும், மற்றொரு அடியாளை மாடியில் இருந்து மின் கம்பிகள் மேல் தள்ளி விடுகிறார். தண்ணீர் கிடைப்பதே அரிதான் இந்நாட்களில் பீப்பாய் தண்ணீரை நாசப்படுத்தியது, எப்பவாவது மின்சாரம் சுமந்து வரும் கம்பிகளை அறுத்தது போன்ற செயல்கள் சுறாவின் நாயகத்தன்மையையே கேள்விக்குறியாக்குகிறது. தன் குப்பத்திற்கு ஒரு நியாயம், மற்ற பகுதிகளுக்கு வேறு நியாயம் என இருக்கிறார் சுறா. விஜய்க்கு அரசியலில் வரும் எண்ணம் இருப்பதாக தெரிகிறது. பொதுவில் ஒரே நாக்கு, ஒரே வாக்கு என தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொரு முறையும் வெவ்வேறு மேடையில் மாற்றாமல் சொல்வது அரசியல்வாதிகள் வழக்கம். அதைப் போல் ஒரே மாதிரி கதை கொண்ட படங்களையே எப்பொழுதும் நடித்து தனது அரசியல் ஞானத்தை மறைமுகமாக சொல்கிறார் போல!!
தமன்னா நாயகியாக. இதுவரையான முந்தைய படங்களில் சின்னக் குழந்தை போல் பாடல்களிற்கு ஆடிக் கொண்டிருந்தவருக்கு அற்புதமான வேடம் அளித்து அவருக்கு பெருமை தேடி தந்துள்ளனர். தனது நாய்க்குட்டி காணாமல் போனதற்காக கடலினுள் விழுந்து தற்கொலை செய்யப் போகிறார். தன்னை காப்பாற்றிய சுறாவின் நல்ல குணத்தை இரண்டே சந்திப்புகளில் உணர்ந்துக் கொண்டு காதலுறுகிறார்.
வடிவேலு. வெடிக்க தயாரான பலூன் போன்ற வயிற்றுடன் வருகிறார். அவர் வரும் காட்சிகளை சம்பந்தமில்லாமல் படத்தில் ஆங்காங்கே ஒட்டியுள்ளனர். நகைச்சுவை காட்சிகள் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.
தேவ் கில் சோபிக்காத புதுமுக வில்லன். பாதிரியாராக ராதாரவி, தமன்னாவின் தந்தையாக மதன் பாப், வில்லனின் துணையாக சீமன் மற்றும் இளவரசு என்ற பலர் உள்ளனர். இவர்களைத் தவிர்த்து அலைகளுடன் உயிர்ப்புள்ளதாய் கடல், உணர்ச்சிகளை காட்டாத கட்டுமரம், நாயகியின் நாய், எல்.சி.டி. திரையில் வரும் கவுண்டமணி, செந்தில் போன்றவர்கள் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். நாயகன் கனவு பாட்டிற்கு மட்டுமல்லாமல் உள்ளுர் திருவிழாவிற்கும் வெள்ளைக்காரிகளுடம் நடனமாடுகிறார். ஆனால் வில்லன் வெள்ளைக்காரன்களை அடியாளாக வைத்து நாயகனை கிண்டல் செய்வது குறிப்பிடத்தக்கது.
மணிஷர்மாவின் பிண்ணனி இசை சில இடங்களில் எங்கோ கேட்டது போல் உள்ளது. ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் படத்தின் ஒரே ஆறுதல். சண்டைக் காட்சிகளில் கனல் கண்ணன் தெரிகிறார். ஆனால் உதை வாங்க அவர் இப்படத்தில் தலைக் காட்டவில்லை. இயக்குனர் எஸ்.பி.இராஜக்குமாருக்கு அதீத தைரியம் தான். தயாரிப்பாளர் சங்கிலி முருகன் இன்னும் கொஞ்சம் யோசித்திருக்கலாம்.
படம் இரண்டரை மணி நேரங்களில் முடிந்து விடுகிறது. ஆனால் 'சன்' குழுமத்தின் அக்கப்போர்கள் சில மாதங்களுக்கு அவர்களின் அனைத்து அலைவரிசைகளிலும் தொடர் ரோதனையாக வந்துக் கொண்டிருக்குமே என்று தான் யோசிக்க வேண்டியுள்ளது.