"அசல்"- அஜீத், சரண், வைரமுத்து என்ற மூவர் வெற்றி கூட்டணியின் மற்றொரு வெற்றிப் படம்.
ஆயுத வியாபாரியான ஜீவானந்தம் என்பவருக்கு மூன்று மகன்கள். அதில் இரண்டு மகன்கள் மனைவிக்கும், நாயகன் ஆசை நாயகிக்கும் பிறந்தவர்கள். சிறு வயது முதலே நாயகனை அவரது சகோதரர்கள் ஒதுக்கியே வைக்கின்றனர். தந்தையின் மரணத்திற்கு பிறகு ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் சகோதரர்களை காக்கும் நாயகனை சகோதரர்களே சுட்டு விடுகின்றனர். அவர்கள் ஏன் சுட்டனர் என்று கண்டுபிடித்து நாயகன் எடுக்கும் நடவடிக்கைகள் தான் படத்தின் முடிவு.
அஜீத். அப்பா மகன் என இரண்டு வேடங்களில். 'அல்டிமேட் ஸ்டார்' என்ற பட்டத்தை துறந்து அஜீத்குமார் என்னும் பெயர் அநாதையாய் வருகிறது. அவரது அறிமுகமும் பெரிய அளவு காட்சி அமைப்புகள் இல்லாமல் இருப்பது கூடுதல் நல்ல விஷயம். சிகார் பிடித்த வண்ணமாக படம் முழுவதும் வியாபித்திருக்கிறார். படம் நெடுகிலும் நடக்கிறார். ஆனால் அவர் நடக்கும் காட்சிகள் வெவ்வேறு இடங்களுக்கு மாறிக் கொண்டே வருவதால் பார்ப்பதற்கு தொய்வில்லாமல் இருக்கிறது. நாயகனை மட்டுமே நம்பி எடுக்கப்பட்டிருக்கும் படம். அதிக அலட்டல் இல்லாமல் நாயகனும் படத்தை நன்றாகவே தோளில் சுமக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றில் தலை நுழைத்ததோடு மட்டும் அல்லாமல் இணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். படத்தில் 'தல' என்ற சொல் நிறைய முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.
சமீரா ரெட்டி. பிரான்சில் நாயகனின் நிழலாக வருகிறார். முன்னை விட மெலிந்து பொலிவாக உள்ளார். வில்லன ராஜிவ் கிருஷ்ணா தரும் சங்கடங்களை பொறுத்துக் கொள்வதை தவிர நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மற்றொரு நாயகியாக தோன்றியிருக்கிறார் பாவனா. அவருக்கும் சொல்லிக் கொள்ளும் படியான வாய்ப்பு நடிப்பதற்கு இல்லை.
சம்பத், ராஜிவ் கிருஷ்ணா, பிரதீப் ராவத், கெல்லி டார்ஜி, காணாமல் போன சுரேஷ் என மொத்தம் படத்தில் ஐந்து வில்லன்கள். சம்பது மற்றும் ராஜிவ் கிருஷ்னா நாயகனின் சகோதரர்களாக நடித்துள்ளனர். இதில் ராஜிவ் கிருஷ்ணாவிற்கு நடிக்க கொஞ்சம் வாய்ப்பு கிடத்துள்ளது. சம்பத்திற்கு பெரியளவு வில்லத்தனம் பண்ணக் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. பிரதீப் ராவத்திற்கும் அதே நிலைமை. இதில் கெல்லி டார்ஜி மட்டும் மிரட்டுகிறார். சுரேஷும் பிசுபிசுத்துப் போகிறார்.
யூகி சேது. கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றில் இடம் பெற்றிருந்தாலும் இப்படத்தை பொறுத்தவரை நகைச்சுவையில் 'டான் சம்சா' என்ற பெயரில் ரசிகர்களை அசத்தியுள்ளார்.
பிரசாந்த். படத்தின் மற்றொரு நாயகன். முதல் படம் என்று நம்ப முடியாத அளவிற்கு உள்ளது இவரது ஒளிப்பதிவு. நாயகனின் அறிமுகம் முதல் கடைசி வரை இவரது கேமிரா விளையாடுகிறது என்றால் மிகையல்ல. படத்தில் தெரியும் பிரான்சின் அழகிற்கு இவரே காரணம். 'துஷ்யந்தா' பாடல் காட்சிப்படுத்தி இருக்கும் விதமும், இசையும் அருமையாக உள்ளது. மற்றபடி பரத்வாஜின் இசை சோபிக்கவில்லை.
இயக்குனர் சரண். அதிகம் கதையில் மெனக்கிடவில்லை. பழி வாங்கும் கதைக்கு அழகிய பூச்சுக்கள் பூசி அஜீத் என்னும் முகமூடியை போர்த்தி திரையில் அசலாக உலவ விட்டிருக்கிறார். பளபளக்கும் முகமூடி கொண்டு படத்தினை ஓட்டி விடலாம் என்ற இயக்குனரின் நம்பிக்கை மெய்ப்படும் வாய்ப்பு நிறைய உள்ளது.