காதல் மூன்றெழுத்து கவிதை. உண்மைதான் ஒரு கவிதை எப்படி அனைத்து சுவைகளையும் தன்னகத்தே வைத்து படிப்பவர்களை உணரச் செய்கிறதோ அதுபோலத்தான் காதலும்.அதில் விழுந்தவர்களுக்கு தெரியும் அது ஒரு சுகமான சிறைவாசமென்று. மீள்வது கடினமாயினும் அதில் குதித்திட யாரும் நேரம் காலம் பார்ப்பதில்லை. யாரோ ஒருத்தியை/ ஒருத்தனை பார்த்தும் பூக்கின்றது அந்து பூ. அதை பல நபர்கள் காமத்துக்காக கசக்கி எறிகிறார்கள். சிலர் வாழ்நாள் முழுவதும் சூடிக் கொள்கிறார்கள் அது ஆணாயினும். சிலர் மட்டும்தான் அதை அழகான பூச்சரமாக இன்னும் சிலவற்றை சேர்த்து தொடுக்கிறார்கள் அல்லது தொடுக்க இந்த சமுதாயமும் அவர்களை சார்ந்தவர்களும் ஒத்துழைக்கிறார்கள்.
காதல் - காற்று எங்கேயும் இருக்கலாம் ஆனால் அது உலகத்தைவிட்டு வெளியே செல்வதில்லை. அதுபோலத்தான் காதலும் நீ எங்கு சென்றாலும், எங்கிருந்தாலும்,விரும்பினாலும்,வெறுப்பதை போல நடித்தாலும்,மறந்துவிட்டேன் என உண்மையை மறைத்து பேசினாலும் உனக்குள்தான் அது.
எங்காவது அவளின்/அவனின் பெயர் கேட்டதும் உள்ளுக்குள் அந்த காதல் ரசம் பாய்ந்து ஏற்படுத்தும் ரசாயன மாற்றம்.அவளின்/அவனின் பெயர் கொண்ட குழந்தையை ஒரு ஈர்ப்புடன் பார்ப்பதோ, கூடுதலாக இன்னுமொரு முத்தம் கொடுப்பது காய்ந்திராத காதலை மேலும் ஈரமாக்கும். யாரோ ஒருத்தரின் திருமண அழைப்பிதழில் இருவரின் பெயரையும் பொருத்தி கற்பனை செய்வது.
பிறிதொருவர் மூலமாகவோ அல்லது பார்வையை எங்கேயோ பதித்து அவள்/அவன் பேசுவதை எப்பொழுதும் போல அனிச்சையாக கேட்டதையோ, இருவரும் காதலிக்கிறோம் என்ற உறவில் மனமுடிப்பின் முன்பே குடும்ப கட்டுப்பாடு, சண்டை போட்டால் யார் முதலில் பேசுவது, வருமானம் குறித்து வறுமை காதலில் வளமாக யோசித்தது, பேரன் பேத்தி பிறந்தவுடன் எப்படி நம் வாழ்க்கையை ருசிப்பது, இன்னும் வாழ்நாளில் வரவிருக்கிறவற்றை எல்லாம் பேசிய, உலகத்தின் ஏதோ ஒருமூலையில் நம்மையும் அறியாமல் நம் காலத்தை சீக்கிரமாக கரைத்து குடிக்கும் கடிகாரமுள் பார்த்தபடி பட்டும் படாமல் மற்றவர்களுக்காக கொஞ்சம் உரசி கொதித்தெழும்பும் நிறைய ஆசையை வெளிப்படும் வார்த்தைகளிலும் மறைத்து தமிழ்மரபு மானம் காத்தபடி காற்று வாங்கி பேசியதையும் ஆதாரமாகக் கொண்டு, அவனுக்கு /அவளுக்கு பிடித்தவற்றை பார்க்கும் பொழுது அது அஃறிணையானாலும் சரி அது பற்றி இருவருமோ அல்லது தனிமையில் கற்பனையில் ஒரு உருவம் வரைந்து மனக்கண்ணில் பேசி தீர்த்த காலம் இனி வருமா?
என வரும்காலம் குறித்த தேடலில் கடந்தகால கவிதைத் தாள்களை புரட்டியபடி பிரவேசிக்கும் ஒவ்வொரு நொடியும் நிகழ்த்திவிட்டு செல்கிறது நிகழ்கால அலைகளில் மிதந்தபடி பலதடவை படித்த அந்த காதல் கடிதம் வரிகளின் வார்த்தையை தேடியே போகிறது இன்னமும் பலபேருக்கு.
தனிப்படர் மிகுதி
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி. (1191)
தாம் விரும்புகின்ற காதலர் தம்மை விரும்புகின்ற பேறு பெற்றவர், காதல் வாழ்க்கையின் பயனாகிய விதை இல்லாத பழத்தைப் பெற்றவரே ஆவர்.
-தெய்வப்புலவர்.திருவள்ளுவர்
காதல் வாழ்வு
அன்பால் அவளும் அவனும் ஒருமித்தல்
துன்பம் அவளுக்கு என்னில் துன்புறுவான் - துன்பம்
அவனுக்கு எனில் அவளும் அவ்வாறே, இந்தச்
சுவாமிக்க வாழ்வைத்தான் தூயோர், நவையற்ற
காதல்வாழ்வு என்று கழறினார் அக்காதல்
சாதல் வரைக்கும் தழைத்துஓங்கும் - காதல்
( நவை - குற்றம், தீமை ; கழறினார் - சொன்னார் )
-பாவேந்தர்.பாரதிதாசன்
எங்கேயாவது பாருங்கள் எவனாவது என்னமாதிரி நின்னுகிட்டு இருப்பான். பரட்ட தலையோட, பழைய டிரஸ் போட்டுக்கிட்டு, ஒரு பிஞ்சிபோன செருப்ப மாட்டிகிட்டு, பஸ்க்கு மட்டும் பாக்கெட்ல காசு வச்சிக்கிட்டு. அதுக்காக நாங்கெல்லாம் காதலிக்க கூடாதா என்ன? ஆனா அவன பொறுக்கின்னு மட்டும் நினைக்காதிங்க.அவனுங்க நிறைய பேரு இருக்கானுங்க. அவனுங்களத்தான் நிறைய பேரு லவ் பண்றாங்க ஏன்? அவன் பாக்க அழகா இருக்கான்னா? இல்ல டப்பு பார்ட்டினா?
-தொடரும்